தேசீய கீதங்கள் 5. தேசீயத் தலைவர்கள் |
||
முன்னாளில் இராமபிரான் கோதமனா தியபுதல்வர் முறையில் நின்று பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத் தியஎமது பரத கண்ட மின்னாள்இங் கிந்நாளின் முதியோளாய்ப் பிறரெள்ள வீழ்ந்த காலை அன்னாளைத் துயர்தவிர்ப்பான் முயல்வர்சில மக்களவ ரடிகள் சூழ்வாம். |
1 | |
அவ்வ்றிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன், தன் அன்னை கண்ணீர் எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றேலென் உயிர்துடைப்பேன் என்னப் போந்து, யௌவனநாள் முதற்கொ டுதான் எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும் செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி யானுழைப்புத் தீர்த லில்லான். |
2 | |
கல்வியைப்போல் அறிவும், அறி வினைப்போலக் கருணையும்,அக் கருணை போலப் பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு நிகரின்றிப் படைத்த வீரன், வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம் என அதனை வெறுத்தே உண்மைச் சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கன்றித் தனக்குழையாத் துறவி யாவோன். |
3 | |
மாதாவாய் விட்டலற அதைச்சிறிதும் மதியாதே வாணாள் போக்கும் தீதாவார் வரினுமவர்க் கினியசொலி நன்குணர்த்துஞ் செவ்வி யாளன், வேதாவா யினுமவனுக் கஞ்சாமே உண்மைநெறி விரிப்போன் எங்கள் தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க! |
4 | |
எண்பஃதாண் டிருந்தஅவன் இனிப்பல்லாண்டு இருந்தெம்மை இனிது காக்க! பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந் துக!எமது பரத நாட்டுப் பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி போற்புதல்வர் பிறந்து வாழ்க! விண்புல்லு மீன்களென அவனன்னார் எவ்வயினும் மிகுக மன்னோ! |
5 |