தேசீய கீதங்கள் 1. பாரத நாடு |
||
ராகம்- பூபாளம் | ||
மன்னும் இமய மலையெங்கள் மலையே மாநில மீதது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே பார்மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே |
1 | |
மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை நாடே |
2 | |
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் கன்னலும் தேனும் கனியும்இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே |
3 |